Header Ads

அவதாரங்கள் - பரசுராம அவதாரம்

பரசுராம அவதாரம்

பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.

தன் தந்தை ஜமதக்கினி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரிய அருச்சுனனை கொன்றவர். மேலும் சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர்.

கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.

இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.

இவரது கதை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.

கேரளம் பரசுராமரின் பூமி என கேரளத்தவர்களின் தொன்னம்பிக்கை.

புரூரவசுவுக்கும், தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி.

காதி சந்திர வம்சத்தில் பிரசித்தி பெற்ற மன்னன். காதிக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள். அவளை ரிஷிகன் என்ற பிராமணன் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். தன மகளை ஒரு ஏழைப்பிராமணனுக்குக் கொடுக்க விரும்பாத அரசன், " ஒரு காது பச்சையாகவும், மற்ற அம்சங்கள் வெண்மையாகவும் உள்ள ஆயிரம் குதிரைகளை நீ கொடுத்தால் என் மகளைக் கொடுக்கிறேன் " என்று சொன்னான்.

ரிஷிகனால் அதைக் கொண்டுவருவது முடியாத காரியம் என்று அரசன் நினைத்தான். ரிஷிகனோ, வருண பகவானை வேண்டி, அரசன் கேட்டவாறு ஆயிரம் குதிரைகளைப் பெற்று வந்து அரசனிடம் கொடுத்து சத்தியவதியைத் திருமணம் செய்துகொண்டான்.

சிறிது காலத்துக்குப் பிறகு, சத்தியவதிக்கு ஒரு பிள்ளை வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. சத்தியவதியின் தாய் தனக்கு ஒரு மகள் இல்லையே என்று கவலைப்பட்டாள்.

இருவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற எண்ணிய ரிஷிகன், விசேஷ சக்தி கொண்ட பால்சோறு தயாரித்து அதை இரண்டு பாகமாகப் பிரித்து முதல் பாகத்தைத் தன மனைவிக்கும், இரண்டாவது பாகத்தை அவள் தாய்க்கும் கொடுக்கும்படி வைத்துவிட்டு, நீராடச் சென்று விட்டான்.

அச் சமயத்தில் சத்தியவதியின் தாய் அங்கே வந்து, இரண்டாம் பாகத்தைத் தன மகளுக்குத் தந்து, முதல் பாகத்தைத் தானே உண்டுவிட்டாள். சிறிது நேரம் கழித்து வந்த ரிஷிகன், நடந்ததை அறிந்து பதறினான்.

தன மனைவியிடம், " பிராமண மந்திரம் ஏற்றிய உணவை உன் தாய் அருந்திவிட்டாள். அவளுக்குப் பிறக்கும் மகன், பிரம்ம ஞானியாகப் பிறப்பான். க்ஷத்ரிய மந்திர உருவேற்றியதை நீ அருந்தியதால், உனக்குப் பிறக்கும் மகன் கொடிய அரச குணங்களோடு விளங்குவான் " என்று கூறி வருந்தினான்.

ரிஷிகனின் மனைவிக்கு ஜமதக்னி என்னும் மகன் பிறந்தான். அதன்பிறகு, ஜமதக்னி ரேணுகாதேவியை மணம் புரிந்து, அசுமணன் முதலிய பல புத்திரர்களைப் பெற்றான். அவர்களில் ஒருவன்தான் பரசுராமன். இவன் மகாவிஷ்ணுவின் அவதாரம்.

பரசுராமன் தன்னைப் பலம் மிக்கவனாகவும், தனக்கு நிகர் யாரும் இல்லைஎன்றும் எண்ணிப் பூமியை இருபத்தொரு முறை வலம் வந்தான். க்ஷத்ரியர்களக் கொன்று பழி தீர்த்தான்.

சூரிய வம்சத்தில் பிறந்தவனாகிய கேகய நாட்டு மன்னன்திருதவீரியனின் மகன் கார்த்தவீரியார்ச்சுனன் என்பவன்.

இவனுக்குப் பிறவியிலேயே கால்கள் இல்லை. பன்னிரண்டு வயதுக்குமேல்,தாத்தாத்ரேயரிடம் ஞான உபதேசம் பெற்றுப் பலசாலியாக நாட்டை ஆண்டு வந்தான்.

கார்த்தவீரியார்ச்சுனன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது, அவனுக்கும் அவனது படையினருக்கும் கடும் பசி உண்டானது.

அப்போது, ஜமதக்னி முனிவர், தன்னிடமிருந்த காமதேனு என்னும் தேவ பசுவின் உதவியால் அவர்கள் அனைவர்க்கும் அறுசுவை உணவளித்தார். மன்னன் என்ற திமிர் படைத்த கார்த்தவீரியார்ச்சுனன், " காட்டில் வாழும் முனிவருக்குக் காமதேனு தேவையில்லை. ஆகவே, அதை எனக்கே கொடுங்கள்" என்று கேட்டான்.

முனிவர் மறுக்கவே, மன்னன் அந்தத் தேவ பசுவைப் பலவந்தமாகத் தன நாட்டுக்குப் பிடித்துச் சென்றான்.

அதையறிந்து கோபம் கொண்ட ஜமதக்னியின் மகன் பரசுராமன், கவசம் அணிந்து, வில்லையும் கோடரியையும் ஏந்திக்கொண்டு விரைந்து சென்றான்.
தனியாகவே வீரத்துடன் போராடி, மன்னனின் தலையை வெட்டி வீழ்த்திவிட்டுக் காமதேனுவை மீட்டு வந்தான்.

இதையறிந்த ஜமதக்னி முனிவர், " அரசனைக் கொன்றது ஒரு பிராமணனைக் கொன்றதைவிட அதிக பாவமான காரியமாகும். அதனால், அப்பாவம் தீர நீ யாத்திரை செய்து வருவாயாக " என்று கூறி அனுப்பி வைத்தார். அவ்வாறே, பரசுராமன் யாத்திரை சென்று வந்தான்.

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி ஒருமுறை மனச் சபலமுற்று, ஹோம காலத்துக்குள் தண்ணீர் கொண்டுவரத் தாமதமாகி விட்டதால், கடும் கோபம் கொண்ட முனிவர், " அவளைக் கொன்று விட்டு வா " என்று தன மகனிடம் ஆணையிட, பரசுராமன் தன கோடரியால் தன தாயை வெட்டி வீழ்த்தினான்.

" மகனே, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் " என்று தந்தை கூற, பரசுராமன் அதற்கு, " என் தாயாரும், சகோதரர்களும் பிழைத்து எழ வேண்டும் " என்று கேட்க, முனிவரும் அவ்வாறே அருள் செய்தார். தாயும், சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

தன்னுடைய தந்தைக்கு இவ்வளவு சக்தி அவரது தவ வலிமையால்தான் கிடைத்தது என்று எண்ணிய பரசுராமன் தானும் தவம் செய்யக் காட்டுக்குச் சென்றான்.

அந்நேரத்தில், கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்கள் பரசுராமனைப் பழிவாங்க நினைத்து, பரசுராமனின் தந்தை ஜமதக்னியின் தலையை வெட்டி விட்டனர். அதைப் பார்த்த ரேணுகாதேவி அலறினாள். அவளது அழுகையொலி கேட்டுப் பரசுராமன் கடும் கோபம் கொண்டு, கோடரியை ஏந்திக்கொண்டு, கார்த்தவீரியார்ச்சுனனின் புதல்வர்களை வெட்டி வீழ்த்தினான்.

அத்தோடு கோபம் தீராமல், " இருபத்தொரு தலைமுறைகள் க்ஷத்ரியர் வம்சம் தழைக்காமல் இருக்க அவர்களை நாசம் செய்வேன்" என்று சபதம் ஏற்றான்.

பின், தந்தையின் தலையையும், உடலையும் ஒன்று சேர்த்து அக்கினியில் சம்ஸ்காரம் செய்தார். ஜமதக்னி முனிவர் சப்தரிஷி மண்டலத்தில் நட்சத்திரமாகப் பிரகாசித்தார்.

பரசுராமன் தான் செய்த சபதப்படி, இருபத்தொரு முறை உலகை வலம் வந்து க்ஷத்ரியர்களை வதம் செய்து, பூமியை முழுவதும் கைப்பற்றிக் காசிபர்க்குத் தானம் செய்துவிட்டு, மகேந்திர பர்வதத்தை அடைந்து தவம் இயற்றிக்கொண்டு வருகிறார்.


அவர் இப்போதும் உயிர் வாழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. அவர் சாகாவரம் பெற்றவராகையால், அவர் சிறந்சீவிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

No comments

Powered by Blogger.