Header Ads

குருபெயர்ச்சி பலன்கள் 2017 - 2018 - துலாம், விருச்சிகம், தனுசு


துலாம்

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களே! குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால், கூடுமானவரை சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. அடுத்தடுத்து வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டாம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் துலா ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிலும் தெளிவு பிறக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு நல்ல சம்பளத்தில் எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குருபகவான் தன் 7-ம் பார்வையால் துலா ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜன்ம குருவால் கணவன் - மனைவிக்கு இடையில் சின்னச் சின்ன கசப்பு உணர்வுகள் ஏற்பட்டாலும், அன்பு குறையாது. ஒருவரின் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

துலா ராசிக்கு 2 மற்றும் 7-ம் இடத்துக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புது வேலை அமையும். ஆனாலும், வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால்,நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து செல்லும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். பிற மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

துலா ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உடைய குருபகவான் தன் சுயநட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், தடைகளையும் கடந்து முன்னேறுவீர்கள். கடன் பிரச்னைகள் கவலை தரும். ஆனாலும், வசதி வாய்ப்புகள் கூடும்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் துலா ராசிக்கு 2-ல் அமர்வதால், நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், குடும்பத்தில் வாக்குவாதங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களும் ஏற்படும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர விளம்பரங்களில் செலவிடுவீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்கள் பணியில் இருந்து விலகுவார்கள். பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படும். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், பிளாஸ்டிக், கன்சல்டன்சி, ஏற்றுமதி வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும் மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். மேலதிகாரிகளிடம் பணிவாக நடந்துகொள்ளவும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பள உயர்வு போன்றவற்றைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.

மாணவ மாணவிகளே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த கடின முயற்சி அவசியம். அடிக்கடி விடுமுறை எடுக்கவேண்டாம். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! வரும் என்று நினைத்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். இளைய கலைஞர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிடவேண்டி வரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சற்றே சோதனைகளைத் தந்தாலும், விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் காரியம் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: வளர்பிறை மூன்றாம் பிறை நாளில், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் வழிபடுங்கள். தடைகள் நீங்கும்.

கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால், சவால்களைச் சந்திக்கவேண்டி வரும். எவ்வளவுதான் பணம் வந்தாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் துரத்தும். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகமாகத் தீர்வு காண முயற்சிக்கவும். பணப் பற்றாக்குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குருபகவானின் பார்வை

குருபகவான் தன் 5-ம் பார்வையால் விருச்சிக ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வசதியான வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கு 6-ம் வீட்டை குருபகவான் தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், எடுத்த வேலைகளை முடிக்காமல் விடமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களை நம்பி புதுப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உறவினர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

விருச்சிக ராசிநாதனும், 6-ம் வீட்டுக்கு அதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வ தால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

விருச்சிக ராசிக்கு 2 மற்றும் 5-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கு இடையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசியிலேயே செல்வதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். மகான்கள், சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். போட்டிகளைச் சமாளிக்க புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவித்தும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வீர்கள். மூத்த அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உங்கள் மீது பழி சுமத்துவார்கள். சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு வெளிமாநிலத்தில் அல்லது அயல்நாட்டில் வேலை அமையும்.

மாணவ மாணவிகளே! படிப்பில் கவனம் தேவை. அலட்சியம் காட்டினால் உங்கள் நண்பர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிடுவார்கள். தெரியாத விஷயங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். ஆய்வகப் பரிசோதனைகளில் கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய கற்பனைத் திறன் வளரும்.

இந்த குருப் பெயர்ச்சி அலைச்சல், செலவினங்களைத் தந்தாலும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொண்டு முன்னேற வைக்கும்.

பரிகாரம்: சஷ்டி திதியன்று திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்கு லாபஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால், கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குருபகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

தனுசு ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் குருபகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால், மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்குகளில் வெற்றி உண்டு.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி உண்டு. பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குருபகவான் சென்று மறைவதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் சலசலப்புகள் உண்டாகும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னைகளால் கலக்கம் உண்டாகும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். சிலர் வீடு மாறவேண்டிய நிலையும் ஏற்படும். முதுகுத்தண்டில் வலி, ஒற்றைத் தலைவலி வந்து செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை நவீனமாக்குவீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பாக இருக்கவும். வி.ஐ.பி.க்களும் வாடிக்கையாளர்களாக வருவார்கள். அரசு கெடுபிடிகள் தளரும். நகை, ஆடை, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் வகைகளில் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் மரியாதை கூடும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அவர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். சக ஊழியர்களும் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

மாணவ மாணவிகளே! சக மாணவர்களால் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும்.

கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வெளிவராமல் இருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாவதற்கு சில முக்கிய பிரமுகர்களின் உதவி கிடைக்கும். விருதுகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரைக்கப்படும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் தோல்விகளால் துவண்டுக் கிடந்த உங்களை சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: தசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமாநல்லூரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.

கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்.


No comments

Powered by Blogger.