Header Ads

குருபெயர்ச்சி பலன்கள் 2017 - 2018 - கடகம், சிம்மம், கன்னி

கடகம்

கடக ராசிக்கு 4-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்ந்து பலன் தர இருக்கிறார். எதிலும் பொறுமை காப்பது நல்லது. நல்லவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் - மனைவிக்கு இடையில் சிலர் பிரச்னை ஏற்படுத்தப் பார்ப்பார்கள் என்பதால் கவனமாக இருக்கவும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்படக்கூடும். சிலருக்கு வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் கடக ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால், பண வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

குருபகவான் தன் 7-ம் பார்வையால் கடக ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். சிலர் வேலையில் இருந்துகொண்டே பகுதி நேரமாகத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு அமையும். அடகில் இருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் கடக ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், பாதியில் நின்ற கட்டட வேலையை மறுபடியும் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். தாயாருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.

கடக ராசிக்கு 6 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கில் நெருக்கடிகள் நீங்கும்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் கடக ராசிக்கு 5-ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு மரியாதை கூடும். வருமானம் உயரும். கடன்கள் அடைபடும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன்னுடைய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் பயணிப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீது வீண்பழி சுமத்தப்படும். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களை நம்பி ஏமாறவேண்டாம். எதிலும் மாற்று வழியை யோசிப்பது நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க உதவும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். என்னதான் அதிக சம்பளம் கொடுத்தாலும் வேலையாட்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராடவேண்டி இருக்கும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்கள், லாட்ஜிங் வகைகளால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி இருக்கும். அதிகாரிகளில் ஒரு தரப்பினர் உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், மற்றொரு தரப்பினர் குறை கூறிக்கொண்டே இருப்பார். தகுதி இல்லாதவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் குறித்து ஆதங்கப்படுவீர்கள். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். சலுகைகள் தாமதமாகும்.

மாணவ - மாணவிகளே! படிப்பில் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தகுதி பார்த்து நட்பு கொள்ளவும். கலைத்துறையினரே! சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் பாருங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

இந்த குரு மாற்றம் உங்களுக்கு பிரச்னைகளையும், இடப்பெயர்ச்சியையும் தந்தாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

பரிகாரம்: அஸ்தம் நட்சத்திர நாளில், சென்னை திருவலிதாயம் (பாடி) தலத்துக்குச் சென்று, அங்கே அருள்பாலிக்கும் குருபகவானை வழிபட்டு வாருங்கள். நல்லது நடக்கும்.

வீடு அற்றோற்க்குஇயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.



சிம்மம்

குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்துகொண்டு பலன் தர இருக்கிறார். இக்காலக் கட்டத்தில் சகிப்புத் தன்மை மிகவும் அவசியம்.பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் ஏற்படுவதால் பணப் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். முக்கியமான விஷயங்களில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம். முக்கிய அலுவல்களை நீங்களே செய்வதுதான் நல்லது.

குருபகவானின் பார்வை:

குரு தனது 5-ம் பார்வையால் சிம்ம ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்பு நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புது வேலை அமையும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

குருபகவான் தன் 7-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சிந்தித்து சாதிப்பீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்களைத் தீர்க்க புது வழி ஒன்றை யோசிப்பீர்கள்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

சிம்ம ராசிக்கு 4 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் அமைக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீர்படும்.

06.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். பிற மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

சிம்ம ராசிக்கு 5 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய குருபகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால், பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சிம்ம ராசிக்கு 4-ம் வீட்டில் குருபகவான் அதிசார வக்கிரமாகச் செல்வதால், சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். அடிக்கடி தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், வேலைச்சுமையால் உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும். மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாதீர்கள். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்‌ஷன் வந்து செல்லும். ஆனால், பணப் புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். யாருக்கும் முன்பணம் தரவேண்டாம். விளம்பரம் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பண விவகாரத்தை நீங்களே கவனிப்பது நல்லது. ஏற்றுமதி - இறக்குமதி, எலெக்ட்ரானிக்ஸ், பெட்ரோகெமிக்கல், பரிசுப்பொருட்கள் விற்பனை போன்றவற்றால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் சிம்ம கடமைகளை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேலை விஷயமாக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய வாய்ப்புகளை யோசித்தே ஏற்றுக்கொள்ளவும்.

மாணவ மாணவிகளே! தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங்களும் வதந்திகளும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனாலும், கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பேசப்படும்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி உங்களை சிலநேரம் தவிக்க வைத்தாலும், அனுபவ அறிவாலும், கடின உழைப்பாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: சித்திரை நட்சத்திர நாளில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் தலத்துக்குச் சென்று ஸ்ரீசுந்தரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும் வழிபடுங்கள்; துன்பங்கள் தீரும்.

முதியோர் இல்லத்திற்குச் சென்று உதவுங்கள்.


கன்னி

கன்னி ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். தடைப்பட்ட கட்டடப் பணியை மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் பார்வை:

குரு தனது 5-ம் பார்வையால் கன்னி ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

குரு தனது 7-ம் பார்வையால் கன்னி ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், எதையும் பலமுறை திட்டமிட்டுச் செய்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புதுப் பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணிச் சுமை குறையும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

கன்னி ராசிக்கு 3 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிலரால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும்.

கன்னி ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடங்களுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், கணவன் - மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து செல்லும். தாயாருடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியமும் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாகச் செல்வதால், முயற்சிகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சிலருக்கு தலைச்சுற்றல், தோலில் அலர்ஜி வந்து செல்லும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் வக்கிரகதியில் செல்வதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் கூடிவரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனையையும் புரிந்துகொண்டு முதலீடு செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். நல்ல பங்குதாரர்கள் அமைவார்கள். கமிஷன், துரித உணவகம், ஸ்டேஷனரி, கட்டுமானம் வகைகளால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இனி உங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஆகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

மாணவ மாணவிகளே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளைக் கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்புகள் வெளியாகி புகழ் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், நினைத்ததை நிறைவேற்றும் வல்லமையைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: பெளர்ணமி திதியில் தக்கோலம் தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் ஸ்ரீஜலநாதீஸ்வரர், ஸ்ரீநர்த்தன தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரையும் வழிபடுங்கள்; வளம் பெருகும்.

ரத்ததானம் செய்யுங்கள்.


No comments

Powered by Blogger.