Header Ads

குருபெயர்ச்சி பலன்கள் 2017 - 2018 - மேஷம், ரிஷபம், மிதுனம்


குருபெயர்ச்சி பலன்கள் 2017 - 2018 - மேஷம், ரிஷபம், மிதுனம்


மேஷம்

மேஷ ராசிக்கு 7-ல் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்களையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். வி.ஐ.பி.-க்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். பணவரவும் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் லாப வீட்டைப் பார்ப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.

9-ம் பார்வையால் 3-ம் இடத்தைப் பார்ப்பதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மேஷ ராசியாதிபதியும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் பயணங்களும் இருந்துகொண்டே இருக்கும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால், மனதில் இனம் தெரியாத கவலை ஏற்படும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.

மேஷ ராசிக்கு 9 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய குருபகவான், தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 4.7.18 வரை சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனாலும், அவ்வப்போது தூக்கம் குறையும். பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை முடித்து கிரகபிரவேசம் செய்வீர்கள்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் ராசிக்கு 8-ம் இடத்தில் செல்வதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். வேலைச் சுமையால் மனதில் சோர்வு ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மனதில் அவ்வப்போது இறுக்கம் உண்டாகும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, வழக்கால் நிம்மதியின்மை வந்து செல்லும்.

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கும் சந்தை நிலவரத்துக்கும் ஏற்ப முதலீடு செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். மருந்து, பெட்ரோகெமிக்கல், ஸ்பெக்குலேஷன், கட்டட உதிரி பாகங்கள், போர்டிங் - லாட்ஜிங், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரி ஆதரவாக இருப்பார். சக ஊழியர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆளுமைத் திறனும் நிர்வாகத் திறனும் பாராட்டப்படும்.

மாணவ மாணவியர் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். நினைவாற்றல் கூடும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறுவீர்கள். விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள். உங்களுடைய தனித் திறமையை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளால் புகழ் அடைவீர்கள். விருதுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். வரவேண்டிய சம்பள பாக்கி வந்து சேரும்.

இந்த குருப்பெயர்ச்சி பட்டுப்போன உங்கள் வாழ்க்கையைப் பசுமையாக மாற்றி, எங்கும் புகழைப் பெற்றுத் தரும்.

பரிகாரம்: திருவாதிரை நட்சத்திரத்தன்று மயிலாடுதுறைக்குச் சென்று, ஸ்ரீவதாரண்யேஸ்வரர் கோயிலில் அருளும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்; தேவைகள் பூர்த்தியாகும்.

ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.



ரிஷபம்

2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் ரிஷப ராசிக்கு 6-ம் வீட்டில் பிரவேசிக்க இருக்கிறார். சகட குரு கலக்கத்தைத் தருவாரே என்று அச்சப்படவேண்டாம். சின்னச் சின்ன போராட்டங்களைச் சந்திக்கவேண்டி இருந்தாலும், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்குள் பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். கடன்கள் கவலை தரும். புதியவர்களை நம்பி முடிவு எடுக்கவேண்டாம்.

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வி.ஐ.பி.-க்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

குருபகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். காணாமல் போன முக்கியமான ஆவணம் திரும்பக்கிடைக்கும்.

குருபகவான் தன்னுடைய 9-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

2.9.17 முதல் 5.10.17 வரை ரிஷப ராசிக்கு 7 மற்றும் 12 ஆகிய வீடுகளுக்கு உரிய செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை 3,4-ம் பாதம் துலாம் ராசியில் செல்வதால், கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட காலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால், பிரச்னைகளைப் போராடி சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள்.

ரிஷப ராசிக்கு 8 மற்றும் 11-ம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால், பரபரப்பாகச் செயல்படுவீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பணம் மற்றும் கடன்கள் விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் ரிஷப ராசிக்கு 7-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்து ரிஷப ராசியைப் பார்ப்பதால் திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், மனதில் இனம் தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வீண் விரயங்கள், ஏமாற்றங்கள் வந்து செல்லும்.

வியாபாரம் ஒரு வாரம் இருப்பதுபோல் மறு வாரம் இருக்காது. வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கும் கடன் உதவியும் தள்ளிப் போகும். போட்டியாளர்களால் லாபம் குறையும். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். எந்த ஒரு மாற்றமும் செய்யவேண்டாம். இருப்பதை தக்கவைத்துக் கொள்ளவும். பங்குதாரர்கள் சிலர் தங்கள் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உத்தியோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. மற்றவர்கள் உங்கள் திறமைகள் மறக்கடிக்கப்படும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து செல்லும். உங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சலுகைகளைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.

மாணவ மாணவியர் சமயோசிதமாக நடந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். விளையாட்டுப் போட்டிகளில் அடிபடக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

கலைத்துறையினர்களே! விமர்சனங்களால் சோர்வு அடையவேண்டாம். வாய்ப்புகளை அலைந்து திரிந்துதான் பெறவேண்டி இருக்கும். மூத்த கலைஞர்கள் உதவி செய்வார்கள்.

இந்த குருமாற்றம் அவ்வப்போது சுகவீனங்களையும் தோல்விகளையும் தந்தாலும், ஆராய்ந்து செயல்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அமையும்.

பரிகாரம்: அமாவாசை தினத்தன்று தென்குடித்திட்டை திருத்தலத்துக்குச் சென்று, பசுபதிநாதரையும் தட்சிணாமூர்த்தி பகவானையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் பலிதமாகும்.

கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்
  


மிதுனம்

மிதுன ராசிக்கு பூர்வபுண்ணியஸ்தானமாகிய 5-ம் வீட்டில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர இருக்கிறார். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார்கள். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் மீண்டும் வந்து பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

குருபகவானின் பார்வை:

குருபகவான் 5-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். நல்ல வேலை அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

குருபகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் உங்கள் லாப வீடான 11-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ், கௌரவம் உயரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்த வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்வீர்கள். ஷேர் மூலம் லாபம் வரும்.

குருபகவான் தன் 9-ம் பார்வையால் ராசியைப் பார்ப்பதால், எவரையும் வசீகரிப்பீர்கள். உடல்நலம் சீராகும். உறவினர், நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மிதுன ராசிக்கு 6 மற்றும் 11-ம் வீட்டுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இருந்தாலும் அஞ்சவேண்டாம். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், வீண் டென்ஷன், உடல் அசதி, சோர்வு வந்து செல்லும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். உறவினர்களுடன் அளவோடு பழகவும்.

மிதுன ராசிக்கு 7 மற்றும் 10-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக குரு சென்று மறைவதால், உடல் ஆரோக்கியம் பற்றிய வீண் கவலை வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். அரசாங்கக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். சின்னச் சின்ன கௌரவப் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பணவரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

வியாபாரத்தில் நஷ்டங்களைச் சரிசெய்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களும் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.நீண்ட காலமாக வசூலாகாமல் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

உத்தியோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகும். சில புதிய வாய்ப்புகள் வரும். பதவி உயர்வு உண்டு. சம்பள பாக்கி கைக்கு வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

மாணவ -மாணவிகளே! கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி விரக்தியின் விளம்பிலிருந்த உங்களுக்கு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்து சாதனையாளராக மாற்றும்.

பரிகாரம்: பரிகாரம்: பூரம் நட்சத்திரத்தில், மதுரை மாவட்டம் திடியன் மலை எனும் ஊரில் அருளும் ஸ்ரீகயிலாசநாதரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள்; நினைத்தது நிறைவேறும்.

அருகில் உள்ள கோவிலில் அரசமரக்கன்று நட்டு பராமரியுங்கள்.







No comments

Powered by Blogger.