ஸ்ரீ தத்தாத்ரேயர் - 2 - பிரும்மாவின் படைப்பு
Lord Datta |
பிரும்மாவின்
படைப்பு
ஜென்ம ஜென்மாந்திரங்களுக்கு முந்தையக் காலம் அது. பிரபஞ்சத்தின்
துவக்கமே இல்லாத காலம். புராணங்களின்படி பரமாத்மன் என்ற ஒரு சக்தி மட்டுமே இயங்கி வந்தக்
காலம். ஒரு முறை உருவமற்ற சக்தி பதினான்கு உலகத்தையும் படைக்க எண்ணி பிரும்மா, விஷ்ணு
மற்றும் மகேஷ்வர் என்ற மூவரையும் படைத்தாள். பிரபஞ்சத்தின் முதல் பகுதி துவங்கியது.
படைக்கப்பட்ட அந்த மூவரில் படைக்கும் ஆற்றலைப் பெற்ற பிரும்மாவோ சற்றும் தாமதிக்காமல்
தான் தோற்றுவிக்கப்பட்ட உடனேயே பன்னிரண்டு உலகத்தையும் அற்புதமான எண்ணற்ற ஜீவ ராசிகளையும்
படைக்கத் துவங்கினார். மனித குலம் உயிர் பெற்று எழுந்தது.
அதன் ஆரம்பமாக ஏழு தேவ ரிஷி முனிவர்களான அங்கீரச, அத்ரி,
வசிஷ்டர், புலசா, புலத்தியா, மார்கசி மற்றும் க்ராது என்பவர்களை படைத்தார். அப்படி
படைக்கப்பட்ட பிரும்மாவின் மானசீக புதல்வர்களில் அத்ரி முனிவர் இரண்டாமவர் ஆவர். அதைத்
தொடர்ந்து பிரும்மாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பல்வேறு குணங்களைக் கொண்ட படைப்புக்கள்
மெல்ல மெல்ல வெளி வரத் துவங்க முனிவர்களில் மேலான முனிவரான கார்தப்ரஜாபதியும் பிரும்மாவின்
ஒரு பக்கத்தில் இருந்து வெளிப்பட்டார்.
இப்படியாக உலகம் தோன்றி யுகங்களாக உழன்றது. பிரும்மாவினால்
படைக்கப்பட்ட பிறவிகள் தங்கள் இஷ்டப்பட்டபடி கட்டுக் கோப்பு இல்லாமல் வாழத் துவங்கினார்கள்.
அதனால் பல காலத்துக்குப் பின்னால் ஏற்பட உள்ள பின் விளைவுகளை பிரும்மா எண்ணிப் பார்க்கத்
துவங்கி கவலையுற்றார். வாழ்க்கையில் ஒழுக்கம் இன்றி, உன்னதமான ஆன்மீக வாழ்கையை உருக்
குலைத்தவண்ணம் தான்தோன்றித் தனமாக பூலோகப் பிறவிகள் வாழ்வதைக் கட்டுப்படுத்தி அவர்களை
நல்ல நிலைக்கு வழி காட்டிச் செல்லும் மார்கத்துக்கு எவரையாவது படைக்க வேண்டும் என்ற
அவசியம் எழுந்து விட்டதை உணர்ந்தார். மனதில் பல்வேறு நிலைமைகளையும் தீர ஆராய்ந்து பார்த்தார்.
பிரகதியைப் படித்தபோது அவர்களுடன் வெளிவந்த நியதிகளும் வேத மறைகளும் ஒரு உண்மையை வெளிப்படுத்தி
இருந்தன.
பூவுலகப்பிறவிகள் ஒழுங்கின்றி தான் தோன்றித்தனமாக வாழ்வதைக்
கட்டுப்படுத்த வேண்டும் எனில், அவர்களை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் எனில்,
அவர் ஆரம்பத்தில் படைத்து இருந்த ஏழு முனிவர்களில் ஒருவரான அத்ரி முனிவரால் பிறக்க
உள்ள பிள்ளையினால் மட்டுமே முடியும் என்ற விதி இருந்ததும் புரிந்தது. என்ன செய்யலாம்
என மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தார்.
அத்ரி முனிவரோ திருமணம் ஆகாதவர். நியதியின்படி அத்ரி முனிவருக்கும்
அவர் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்க வேண்டும். அப்படி பிறக்க உள்ள பிள்ளையினால் மட்டுமே
தாம் எண்ணிய நல்ல காரியத்தை நிறைவேற்ற முடியும்.
ஆகவே என்ன செய்து அத்ரி முனிவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது? அத்ரி முனிவரோ திருமணம்
செய்து கொள்வதை விரும்பாதவர். ஆனால் அவருக்கு ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற
காரணத்தை எடுத்துச் சொல்லி அவரை வழிக்கு கொண்டு வர வேண்டும். அடுத்து அவருக்கு ஏற்ற
மனைவியாக யாரை தேர்ந்து எடுப்பது என்ற பிரச்சனை வரும். அப்போது அவரிடம் யாரைக் குறிப்பிடுவது?
பல பக்கங்களிலும் சிந்தனை செய்து பார்த்தவருக்கு ஒரு நல்ல வழி தெரிந்தது.
முனிவர்களை படித்தபோது அவரால் படைக்கப்பட்டவர்களில் ஒருவரே
கார்தப்ரஜாபதி. அவர் பிரும்மாவின் பேத்தியையே மணந்து கொண்டு ஒன்பது பெண்களை பெற்று
எடுத்து இருந்தார். அந்த ஒன்பது பெண்களிலும் அதி உத்தமியும், அழகுள்ளவளும், அதி புத்திசாலியானவளே
அனுசூயா என்பவள். அவளை எப்படியாவது அத்ரி முனிவரை
மணக்க சம்மதித்து வைத்து விட்டால் அவர்கள் மூலம் ஒரு பிள்ளையை பிறக்க வைத்து அந்தப்
பிள்ளை மூலம் உருக் குலைந்தவண்ணம் சென்று கொண்டு இருக்கும் மனித வாழ்வைக் கட்டுப்படுத்தி
அவர்களை நல் வழிக்கு கொண்டு செல்லலாம் என எண்ணியவர் அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டார்.
அத்திரி
மகரிஷி
உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த சப்த ரிஷிகளில்
அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய
மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால்
அனுசூயாவுக்கும் பெருமை.
தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத
புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர். ராமாயணத்தில்
அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட
பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில்
ஒருநாள் தங்கினர்.
அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர்
தன் மனைவி அனுசூயாவை காட்டி, ராமா! அனுசூயா கோபம் என்பதையே அறியாதவள். அசூயை என்னும்
சொல்லுக்கு மனதில் சிறிதும் விருப்பம் இல்லாதவள் எனப்பொருள். இவள் மண்ணுயிர்கள் எல்லாம்
போற்றி வணங்கும் பெருமை கொண்டவள். குணவதி, தர்மவதி, பதிவிரதா தர்மத்தில் தலைசிறந்தவள்.
தர்மமும் புண்ணியமும் நிறைந்த அனுசூயாவிடம் ஆசிபெறுவீர்களாக!, என்று சொன்னார்.
ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டில் மழையே பெய்யவில்லை.
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வறட்சி நிலவியது. எங்கும் தண்ணீர் பஞ்சம். வாயில்லா ஜீவன்களுக்கு
பசும்புல் கூட கிடைக்கவில்லை. இந்தக் காட்சியைக் கண்ட அனுசூயாவிற்கு உள்ளம் உருகியது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் செய்த தவசக்தியால் கங்கையை வரவழைத்தாள். எல்லா குளங்களையும்
நிறைத்தாள். தண்ணீர் பெற்று, பயிர்கள் செழித்து வளர்ந்தன. எங்கும் பசுமை உண்டானதைக்
கண்டு மகிழ்ந்தாள்.
ஒருமுறை அனுசூயாவின் தோழியைச் சந்தர்ப்ப வசத்தால்
சபித்தார் ஒரு முனிவர். பொழுது விடிந்தால் நீ விதவையாவாய் என்பதே அந்த சாபம். என்ன
செய்ய முடியும்? அபலையாய் ஓடி வந்து அனுசூயாவிடம் வந்து நின்றாள் அவள். விஷயத்தை சொன்னாள்.
சாபவிமோசனம் என்பது யார் சாபமிட்டார்களோ அவர்களே தரவேண்டியது என்பதை அறியாதவர்கள் யார்?
இருந்தாலும், நட்புக்கு கை கொடுக்க முன்வந்த அனுசூயா தன் தோழியிடம், விடிந்தால் தானே
நீ விதவையாவாய்! விடியலே இல்லாமல் செய்து விடுகிறேன் என்று ஆறுதல் சொன்னாள்.
ஒரு நாள் இருநாள் அல்ல. பத்து நாட்கள் விடியாமல்
இரவாகவே கழிந்தது. உலகமே திகைத்தது. தேவர்கள் கூடினர். அனுசூயாவிடம் வேண்டிக் கொண்டனர்.
மீண்டும் பகல்வேளை வரவேண்டுமானால் என் தோழி சுமங்கலியாக வாழ வேண்டும், என்று நிபந்தனையிட்டாள்
அனுசூயா.
தேவர்களும் அவ்வாறே வாக்களித்தனர். நினைத்ததைச்
சாதித்து தன் தோழியைக் காப்பாற்றினாள். இத்தகைய மகாஉத்தமி அனுசூயாவின் கணவர் அத்தரிமுனிவர்
என்ன சாமான்யமானவரா? அவரும் புகழிலும், தவத்திலும் யாருக்கும் இணையில்லாதவர். உலகிற்கே
ஒளிதரும் சூரியனுக்கே வாழ்வு தந்த வள்ளல் அத்திரிமுனிவர்.
ஒருமுறை அசுரர்களில் ஒருவனான ஸ்வர்பானு தன்னைக்
காட்டிக் கொடுத்த சூரியதேவன் மீது கோபம் கொண்டான். இவனே கிரகங்களில் நிழல் கிரகங்களான
ராகுகேதுவாக மாறினான். தன் பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் சூரியனைக் கிரகணமாகப்
பிடித்தான். ராகுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒளியை இழந்து நின்ற சூரியனுக்கு மீண்டும்
ஒளி கொடுத்து காப்பாற்றியவர் அத்திரி முனிவரே.
சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கிறான். மாலையில்
மறைந்து விடுகிறான். உலகமே சூரியனின் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது. இரவுநேரத்தில்
வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுவதை எண்ணி வருந்தினார் அத்திரி. அதற்கு ஒரு முடிவு கட்ட
எண்ணினார். ஆழமான சமுத்திரத்தின் அடிப்புறத்தில் போய் அமர்ந்தார். தவத்தில் ஆழ்ந்தார்.
மனுஷ வருஷங்கள் அல்ல. பல தேவவருஷங்கள் தவத்தைத்
தொடர்ந்தார். தவக்கனல் அதிகரித்தது. அவருடைய கண்களில் அபார ஜோதி தோன்றியது. கடல் நீரையும்
கிழித்துக் கொண்டு அந்த ஜோதி பூமியையும் விட்டு வேகமாக கிளம்பிச் சென்றது. பூமியை விட்டு
நெடுந்தூரம் சென்ற ஜோதியைக் கண்ட படைப்புக் கடவுள் பிரம்மா, அதை அப்படியே நிலை நிறுத்தும்படி
திசைகளுக்கு கட்டளையிட்டார்.
பிரம்மாவே நேரில் வந்து, அந்த ஜோதியைத் தன்
தேரில் ஏற்றிக்கொண்டு 21 முறை பூமியை வலம் வந்தார். பிரம்மா செய்த ஏற்பாட்டினை இன்றளவும்
அந்த ஜோதி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஜோதியினைத் தான் இரவில் நிலாவாக வான மண்டலத்தில்
காண்கிறோம். இரவிலும் பூமிக்கு ஒளி தரும் சந்திரனைத் தந்த பெருமை அத்திரி முனிவருடையதே.
யாகம் ஒன்றிற்கு அத்திரி சதுரஹம் என்று பெயர்.
முதன்முதலில் இந்த யாகத்தைச் செய்தவர் இவர் என்பதால் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு
வருகிறது. மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் மகத்தான யாகம் இது.
இந்த யாகத்தை செய்பவர்கள் வேண்டிய பலனைப் பெற்று
வாழ்வர் என்று வேதம் சொல்கிறது. ஆயுர்வேத சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளில் அத்திரிமுனிவர்
மிகவும் கை தேர்ந்தவர். வைத்திய சாஸ்திரத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் இவரின் பங்களிப்பு
சிறப்பானதாகும்.
பிரம்மதேவரின் நகங்களில் இருந்து தோன்றிய விகநஸ
மகரிஷி அத்திரியின் மாணவர். இந்த உலகம் தோன்றிய போதே அவதரித்த இவர், தன் தவவலிமையால்
பல்லாயிரம் புத்திரர்களை பெற்றெடுத்தார். அவர்கள் தங்களை ஆத்ரேய கோத்திரம் என்று வழங்குகின்றனர்.
மழை பெய்ய மறுக்கும் இந்த சமயத்தில், மக்களுக்காக அன்று மழையை வரவழைத்த அத்திரி அனுசூயா
தம்பதிகளை நினைவில் இருத்தி பிரார்த்திப்போம்.
அத்ரி முனிவர்
திருமணம்
அத்ரி முனிவர் திருமணம் ஆகாதவர். ஆகவே அவரை திருமணம் செய்து
கொள்ள வைக்க பல வழிகளை பிரும்மா கையாள நடந்த
சம்பவங்களுக்கு ஏற்ப அத்ரி முனிவரும் கர்தபிரஜாபதியின் மகளான அனுசூயாவை மணந்து கொண்டார்.
ஆனால் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை.
தான் போட்ட திட்டம் நடக்கவில்லையே என்ற கவலை மீண்டும் பிரும்மாவுக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் அத்ரி
முனிவருக்கும் தனக்கு ஒரு மழலை செல்வம் இல்லையே என்ற துயரம் தோன்றியது. பிரும்மாவுக்கு
தோன்றியது அடுத்த வழி. சிவன், விஷ்ணுவுடன் தானும் சேர்ந்து அத்ரி முனிவருக்கு ஒரு குழந்தையாக
பிறந்தால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும். அதற்கேற்ப அடுத்தடுத்து பிரும்மா போட்ட
திட்டங்கள் நிறைவேறின. அத்ரி முனிவரின் துயரை
தீர்க்க தாங்களே மூவரின் அவதாரமாக ஒரு பிள்ளையாக அவருக்கு பிறப்போம் என மும்மூர்த்திகளாகத்
தோன்றி அவருக்கு ஆசீர்வதிக்க அத்ரி முனிவர்
தம்பதிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
Thanks to
Santhipriya
https://santhipriyaspages.blogspot.in/
Thanks to
Santhipriya
https://santhipriyaspages.blogspot.in/
No comments